மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் சமுர்த்தி சமூக மன்றமும் இணைந்து நடாத்திய 2019 ஆம் வருடத்திற்கான மகளிர் தின நிகழ்வுகள் மார்ச் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை 3 மணியளவில் செல்வாநகர் கிழக்கு காளி கோயில் முன்றலில் நடைபெற்றது.
“திறமையான பெண்ணொருத்தி அழகிய உலகைப் படைக்கின்றாள்” எனும் தொனிப் பொருளில் கொண்டாடப்பட்ட நிகழ்வானது எமது பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டலிலும் ஆலோசனையின் பேரிலும் ஒழுங்கு செய்யப்பட்டு உதவிப் பிரதேச செயலாளர் திரு.ஜீ.அருணன் அவர்களின் தலைமையில் பிரதேச செயலக முன்றலில் இருந்து மகளிர் சங்க உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் செயலக உத்தியோகத்தர்கள் அனைவருமாக இணைந்து நிகழ்வு நடைபெறும் இடத்திற்கு நடைபவனியாகச் சென்றடைந்தனர்.
இந்நிகழ்விற்கு மண்முனைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் கே.ரமேஸ், தபால் அதிபர் திருமதி. வை.லோகேஸ்வரராஜா, சமுர்த்தி தலைமை முகாமையாளர் திரு.ஆ.தனேந்திரராஜா ஆகியோருடன் கலாபூசணம் சந்திராதேவி தியாகலிங்கம் அவர்கள் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்கள்.
இந்நிகழ்வின்போது சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினால் பெண்கள் மற்றும் அலுவலர்களுக்கான குழுவினர்களுக்கிடையே போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசில்களும் அதிதிகளால் வழங்கிவைக்கப்பட்டன.
மேலும் இந்நிகழ்வின் விசேட நிகழ்வாக வைத்தியர் கே.ரமேஸ் அவர்களால் “ ஆரோக்கியமான வாழ்வும் தொற்றா நோய் காப்பும்” எனும் தலைப்பிலான விழிப்புணர்வு உரையும் நிகழ்த்தப்பட்டது.
இந்நிகழ்விற்கான பரிசில்களுக்கு கலாசார அலுவல்கள் பிரிவினர் அனுசரனை வழங்கியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இதன் போது சிறுகடன், சுயதொழில் முயற்சி போன்றவற்றினால் சிறப்பான முறையில் வருமானம் ஈட்டிய மூன்று பெண்களும் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.

























